×

மதுரை சித்திரை திருவிழாவில் இன்று மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி: இரவில் தசாவதாரம்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி இன்று மதியம் நடக்கிறது. இரவில், தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.
சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்கட்டாக மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்றது. முதலில் தொடங்கிய மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் கடந்த 2ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், மறுநாள் தேரோட்டம் நடந்தது. பின்னர் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெற்றது.

இதற்கிடையில், மதுரை அருகே உள்ள அழகர்கோவில் சித்திரை திருழாவையொட்டி அழகர், கள்ளழகர் வேடம் பூண்டு கடந்த 3ம் தேதி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டு வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று நடந்தது. காலை 5.52 மணியளவில் மேள, தாளங்கள் முழங்க, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியதால் மதுரை நகரமே குலுங்கியது. பின்னர் மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு நேற்று இரவு 11 மணி அளவில் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

சாப விமோசனம்
இதனைத் தொடர்ந்து வீரராகவப் பெருமாள் கோயிலில் இருந்து கருட வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடாகி மதுரை வண்டியூரில் உள்ள தேனூர் மண்டபத்தில் இன்று காலை எழுந்தருளினார். அங்கு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக மண்டூக முனிவரை, நாரை உருவத்தில் சிலையாக அங்கு வைத்திருந்தனர். அவர் சாபவிமோசனம் பெற்றதை விளக்கும் விதமாக நாரை பறக்க விடப்படும். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்நிகழ்ச்சி முடிந்ததும், மதியம் 3.30 மணிக்கு அனுமார் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளுவார். அங்கு அங்கப் பிரதட்சணம் நடக்கும். பின்னர் மேளதாளம் முழங்க மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள ராமராயர் மண்டபத்துக்கு கிளம்புகிறார்.

இரவில் தசாவதாரம்
ராமராயர் மண்டபத்தில் இன்று இரவு 10 மணியளவில் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் உள்ளிட்ட தசாவதாரங்களில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

மோகினி அவதாரம்
நாளை காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்தில் வீதிஉலா வருகிறார். பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார்.
பின்னர் 8ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, அதிகாலை 2.30 மணிக்கு கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். 9ம் தேதி அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 10ம் தேதி பிற்பகல் 11 மணிக்கு மேல் இருப்பிடம் சென்று அடைகிறார். அங்கு உற்சவ சாந்தியுடன் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

The post மதுரை சித்திரை திருவிழாவில் இன்று மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி: இரவில் தசாவதாரம் appeared first on Dinakaran.

Tags : Madurai Sitri festival ,Mantuga Sage ,Dasavataram ,Madurai: Madurai, Madurai Sitrisha festival ,Dasawadara ,Madurai Shitrisha festival ,Manduka Sage: Dasawataram ,
× RELATED கருட வாகனத்தில் காட்சி தந்தார் அழகர்...